×

கோட்டூர்புரத்தில் சிதிலமடைந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டு நவீன வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும்: பொது மக்களிடம் அமைச்சர்கள் கருத்துக்கேட்பு

சென்னை: கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் உள்ள சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு மறுகட்டுமானம் செய்வது குறித்து அப்பகுதி மக்களிடம் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கருத்து கேட்டனர். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமானம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், கோட்டூர்புரம் மற்றும் சித்ரா நகர் அனைத்து  மக்கள் நல்வாழ்வு சங்கம், பல்லடுக்கு குடியிருப்புகளை கட்டுவதற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்காத நிலையில், இத்திட்டத்தினை செயலாக்குவது குறித்து ஊரகத்தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று திட்டப்பகுதி மக்கள் மற்றும் சங்க நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தினர்.

கூட்டத்தில், ஊரகத்தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
முத்தமிழறிஞர் கலைஞரால் 1970-74 வரையிலான காலத்தில் 82 தொகுப்புகளில் மொத்தம் 1656 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்குகளில் 213 சதுர அடியில் கட்டப்பட்டன. 2009 முதல் 2015 வரையிலான காலத்தில் 8 தொகுப்புகளை இடித்துவிட்டு மறுகட்டுமானம் திட்டத்தின் கீழ் 180  அடுக்குமாடி குடியிருப்புகள் தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்குகளில் 319 மற்றும் 385 சதுர அடியில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. மீதமுள்ள 74 தொகுப்புகளில் உள்ள 1476 சிதலமடைந்த குடியிருப்புகளை அகற்றி, வாகன நிறுத்த வசதி கொண்ட தாங்கு தளத்துடன் கூடிய ஐந்து அடுக்குளில் ஒவ்வொரு குடியிருப்பும் 420 சதுர அடி பரப்பளவில் வரவேற்பறை, உறங்கும் அறை, சமையலறை தனித்தனியே குளியலறை மற்றும் கழிவறை, மின்தூக்கி, ஜெனரேட்டர் உள்ளடக்கிய நவீன வசதிகளுடன் கூடிய 20 தொகுப்புகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை  கட்டித்தர வேண்டும்.

இத்திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட இருப்பதால்,  குடியிருப்புதாரர்களின் முழு ஒத்துழைப்புடன் பழைய குடியிருப்புகளை மூன்று மாத காலத்திற்குள் காலி செய்யும் பட்சத்தில், அக்குடியிருப்புகளை அகற்றிவிட்டு 18 மாத காலத்திற்குள் புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும்.  இவ்வாறு பேசினார். இந்த ஆய்வின் போது வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், தலைமைப் பொறியாளர் ராம.சேதுபதி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : Kotturpuram , Kotturpuram, dilapidated buildings, apartments, ministers
× RELATED தமிழச்சி தங்கபாண்டியன் ஒட்டுமொத்த...