சென்னை: பல ஆண்டுகளாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ள 6 செயல் அலுவலர்களுக்கு மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று கோயில் நிர்வாக அதிகாரி சங்கம் சார்பில் ஆணையர் குமரகுருபரனுக்கு மனு அளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் அருட்செல்வன் ஆணையர் குமரகுருபரனுக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தற்காலி பணி நீக்கம் செய்து செயல் அலுவலர் காமராஜ் 4 ஆண்டுகளாகவும், செயல் அலுவலர்கள் ஜெயச்சந்திரன், சசிகலா, ஆனந்தகுமார் 2 ஆண்டுகளாகவும், செயல் அலுவலர்கள் மணி, சரவணன் ஆகியோர் 6 மாதங்களுக்கு மேலாக உள்ளனர். செயல் அலுவலர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்காலிக பணி நீக்கம் ெசய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் விசாரணை முடிக்கப்படாமலும், மீண்டும் பணி வழங்காமலும் இருந்து வருகின்றனர்.
இவர்களை பணியமர்த்த கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் முந்தைய ஆணையரிடம் மனு அளித்தது. ஆனாலும், இதுவரை அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படவில்லை. பல ஆண்டுகளாக தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள செயல் அலுவலர்கள் மிகவும் வேதனையுடன் உள்ளனர். அவர்களது குடும்பம் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படாமலும் தொடர்ந்து தற்காலிக பணி நீக்கத்திற்கு கால நீட்டிப்பு குறித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படாமலும் ஓரிரு செயல் அலுவலர்கள் விசாணை முடிவடைந்தும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
எனவே ஆணையர், செயல் அலுவலர்களின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து விசாரணை நிலுவையில் வைத்து மீண்டும் பணி வழங்க உத்தரவிடுமாறு கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.