×

பவானி ஆற்றின் குறுக்கே ரூ.18.61 கோடியில் தடுப்பணை கட்டும் பணிகள் தீவிரம்: விநாடிக்கு 80 ஆயிரம் கன அடிநீர் சீறி வந்தாலும் தாக்குப் பிடிக்கும்

அந்தியூர்:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள அத்தாணி பகுதியில் ஓடும்  பவானி ஆற்றில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே ரூ.18.61 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.  பவானி ஆற்றில் குப்பாண்டபாளையம் ஊராட்சி கருவல்வாடிபுதூர் - அம்மாபாளையம் கிராமங்களுக்கு இடையே இந்த தடுப்பணை கட்டப்படுகிறது.  ஆற்றின் குறுக்கே 155 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் (5 அடி உயரம்) உயரத்துக்கு அமைக்கப்படுகிறது. தடுப்பணை பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா கால முடக்கத்தால் மெதுவாக பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கொரோனா தளர்வுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் வேகமெடுத்து வருகிறது. ஆற்றின் நடுவே தற்காலிக பாதை அமைக்கப்பட்டு, தண்ணீர் குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், ராட்சத எந்திரங்களைக் கொண்டு ஆற்றின் நடுவே இரு கரைகளுக்கு மத்தியில் ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டு, கான்கிரீட் தூண்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
தடுப்பணை கட்டி முடிக்கப்படும்போது, 4.2 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

மேலும், ஆற்றுக்குள் 60 அடி முதல் 120 அடி வரையில் ராட்சத ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்படும். அப்போது, தடுப்பணையில் தேக்கப்படும் தண்ணீர் நிலத்துக்குள் செல்லும்போது, நிலத்தடி நீர்மட்டம் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகரிக்கும். மேலும் தேங்கும் தண்ணீர் வெளியேறாமல் இருக்கும் வகையில் ஆற்றின் கரையோரங்களில் கான்கிரீட் பாதுகாப்பு சுவர்களும் அமைக்கப்படுகிறது.

ஆற்றில் உபரிநீர் வரும்போது தடுப்பணையின் இருபுறங்களிலும் அமைக்கப்படும் தலா 2 இரும்புக் கதவுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர், தாழ்வான பகுதியாக உள்ள பவானியை நோக்கி வேகமாகச் செல்வது வழக்கம். வேகமான நீரோட்டத்தைக் கொண்ட பவானி ஆற்றில் விநாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து வந்தாலும் தாக்குப் பிடிக்கும் வகையில் கட்டுமான வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Bavani River , Bhavani River
× RELATED தனியார் தொழிற்சாலை கழிவுநீர் பவானி...