உடுமலை: மடத்துக்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வினீத் நேரில் ஆய்வு செய்தார். மடத்துக்குளம் ஒன்றியம் மெட்ராத்தி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ரூ.20.47 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கின்றன. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் அண்ணா நகரில் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, பணத்தம்பட்டியில் பசுமை வீடு கட்டும் பணி, தாசர்பட்டியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி, 56 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை கலெக்டர் வினீத் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
முன்னதாக, மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, உடுமலை கோட்டாட்சியர் கீதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.