×

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக்கூடாது?...தமிழக அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 3 மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என்று விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அதுசம்பந்தமாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து கடந்த 2017ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது.  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள ஊழியர்கள், அதிமுக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரிடம் இந்த ஆணையம் விசாரணை நடத்தியது. ஆனால்,  3 ஆண்டுகளாகியும் விசாரணை முடியடையவில்லை.

இந்நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் கூறி, ஆணையத்தை முடிக்குமாறு உத்தரவிடக் கோரி தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் பி.முத்துக்குமார் ஆஜராகி, நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  ஆணையம்  விசாரணையை 3 மாதங்களில் முடித்து, இறுதி அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என்பது குறித்து 6 வாரங்களில் விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 6  வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

* மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டது.
* 3 ஆண்டுகளாகியும் விசாரணை முடிவடையவில்லை

Tags : Arumugasami Commission of Inquiry ,Jayalalithaa , Jayalalithaa's death, Judge Arumugasami, Report, Government of Tamil Nadu, high court
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...