புதுடெல்லி: இதுவரை 96 நாடுகளில் பரவி உள்ள நிலையில், வரும் மாதங்களில் உலகளவில் ‘டெல்டா வைரஸ்’ தாக்கம் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் உருமாறிக் கொண்டே செல்வது மக்களை மட்டுமின்றி மருத்துவ உலக நிபுணர்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை பல்வேறு வகையான உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இந்தியாவில் உருமாற்றம் அடைந்த ‘டெல்டா’ தான், உலகத்தை இப்போது அதிகமாக அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.
இந்தியாவில் 2வது அலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இது, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள 2வது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த வைரஸ் தற்போது உலகளவில் 96 நாடுகளில் பரவி உள்ளது. இதேபோல், உருமாறிய மற்ற வகையான ‘ஆல்பா’ 172 நாடுகளிலும், ‘பீட்டா’ 120 நாடுகளிலும், ‘காமா’ 72 நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அடுத்து வரும் மாதங்களில் ‘டெல்டா’ வைரஸ்தான் உலகளவில் அதிகமாக தாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இதன் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் ஜெப்ரேயஸ் மேலும் கூறுகையில், ‘‘டெல்டா வகை இதுவரை அடையாளம் காணப்பட்ட உருமாறிய வைரஸ்களில் ‘அதிகம் பரவக் கூடியது’, இது தடுப்பூசி போடாத மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால், உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளது. சில நாடுகள் பொது சுகாதாரம் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை தளர்த்தியதால், உலகெங்கிலும் பரவல் அதிகரித்து உள்ளது,’’ என்றார்.