×

மருதாநதி அணையில் ரூ.2 கோடியில் மதகுகள் புதுப்பிக்கும் பணி

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் மருதா நதியில் ரூ.2 கோடி மதிப்பில் மதகுகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. இந்த அணையில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மதகுகள் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அய்யம்பாளையத்தில் உள்ள மருதாநதி அணையில்  உள்ள பாசன மதகுகள், ஆற்று மதகுகள் அனைத்தும் தண்ணீரிலேயே இருப்பதாலும், இந்த மதகுகள் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்தநிலையில், மதகுகள் துருப்பிடித்தும், அரிப்பு ஏற்பட்டும் தண்ணீர் கசிந்து வந்தது.

இந்நிலையில் இந்த மதகுகள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மதகுகளை பழுது நீக்கி, தண்ணீர் கசியாத வண்ணம் புதுப்பித்து வண்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அணையில் தற்போது முழு கொள்ளவிற்கு தண்ணீர் உள்ளதால், மாற்று மதகுகளை இயக்கி தண்ணீர் வெளியேறாத வண்ணம், இந்த புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை அணையின் உதவி செயற்பொறியாளர் சௌந்தரம், உதவி பொறியாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

Tags : Marudhanadi Dam , Marudhanadi Dam
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு