விருதுநகர்: விருதுநகரை ஒட்டிய பாவாலி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மக்கள் சிரமத்தில் உள்ளனர். அதிலும் பராசக்தி நகருக்கு உட்பட்ட தெருக்களில் சாலை வசதியில்லை, பாதைகள் மேடு, பள்ளமாக இருப்பதால் சிறுவர்கள், முதியோர் தடுமாறி விழுந்து காயத்துடன் செல்லும் நிலை தொடர்கதையாகி வருகிறது. வாறுகால் வசதியில்லாததால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கழிவுநீரை மிதித்து வீடுகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. கொசுக்கள் ஈக்கள் போல் இருப்பதாலும் துர்நாற்றத்தாலும் தொற்று நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. குடிநீர் குழாய்களிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. குப்பைத் தொட்டியில்லை, அதனால் தெருக்களில் குப்பைகள் சிதறி கிடக்கின்றன.
பன்றிகள் அதிக அளவில் திரிவதால் நோய்பரவ வாய்ப்புகள் உள்ளது. தெருவிளக்கு இல்லாததால் பெண்கள் இரவு நேரங்களில் நடமாட முடியவில்லை. பராசக்தி நகர் ஜெகதீசன் கூறுகையில், பாவாலி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. 2021 ஜனவரியில் கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. புதிய ஆட்சி, புதிய கலெக்டர் மூலம் விடிவு கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.