சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நடைபெற்றது. இதுகுறித்து ப.சிதம்பரம் கூறும்போது, மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்து பேசியதாக கூறினார்.முதல்வருடன் பேசும்போது ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் உடன் இருந்தார். சிவகங்கை தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த மனு ஒன்றையும் கார்த்தி சிதம்பரம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.