சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 140 கோடி மக்கள் தொகைகொண்ட இந்திய நாட்டில், இதுவரை ஒரு நாளைக்கு சராசரி 50 லட்சம் என்றளவில் 29 கோடி மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஒன்றிய அரசின் இலக்கின்படி, 100 சதவிகித மக்களுக்கு டிசம்பர் 2021க்குள் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பு இல்லை. தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒன்றிய பாஜ அரசு முற்றிலும் தவறிவிட்டது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, வேலைவாய்ப்பை பெருக்கவோ, பொருளாதார பேரழிவைத் தடுக்கவோ முற்றிலும் தவறிவிட்டார்.
தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை 100ஐ தாண்டிவிட்டது. எனவே, அனைத்து வகையிலும் மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிற ஒன்றிய பாஜ அரசுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.