கொல்கத்தா : மேற்கு வங்க ஆளுநரை திரும்பப் பெற கோரும் தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது தொடர்பாக சபாநாயகருடன் முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர், மாநில அரசின் நடவடிக்கைகளில் தொடர்ந்து தலையிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இதனிடையே மேற்கு வங்க ஆளுநர் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இந்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகர் பீமன் பேனர்ஜி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பல மசோதாக்களை முடிவெடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போதைய ஆளுநரின் நடவடிக்கைகளை போன்று மேற்கு வங்க வரலாற்றில் எப்போதும் நடந்ததில்லை என்றும் சபாநாயகர் பீமன் பேனர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க ஆளுநர் குறிப்பிட்ட அரசியல் கட்சியாக செயல்படுவதாக குற்றம் சாட்டும் திரிணாமுல் காங்கிரஸ், அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.ஜூலை 2ம் தேதி மேற்கு வங்க சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், இது தொடர்பாக சபாநாயகருடன் முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.