×

வெம்பக்கோட்டையில் வேகமாக குறைந்து வரும் அணை நீர்

*விவசாயிகள் கவலை

சிவகாசி :  வெம்பக்கோட்டை அணைப் பகுதியில் மழை இல்லாததால் அணை நீர் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 7.5 மீட்டர். வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் அணை நீர் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. சிவகாசி நகராட்சிக்கு இங்கிருந்து தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. அணையை சற்றியுள்ள பகுதியில் கிணற்றுப் பாசனத்திலும் விவசாய பணிகள் நடக்கிறது.

வடகிழக்கு பருவமழையால் 4 மீட்டர் வரை அணைக்கு நீர்வரத்து இருந்தது. இதன்பின்னர் போதிய மழை இல்லலாததால், அணை நீர் குறைய தொடங்கியது. அணையில் 4 மீட்டர் நீர் நிரம்பியதால் விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து மழை சரிவர பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் குறைந்து கொண்டே வந்தது. தற்போது அணையில் ஒரு மீட்டர் அளவுக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் அணை நீர் வற்றி விடும் என்பதால் குடிநீர் தேவைக்காக அணையில் உறைகிணறுகள் அமைக்க நகராட்சி அதிகாரிகள் முடிவு ெசய்துள்ளனர்.

அணையில் தண்ணீர்குறைந்து  குளம் போல்  காட்சியளிக்கிறது. ஆடு, மாடுகள் வளர்ப்பவர்களுக்கும் அணை நீர் பயன்பட்டு வந்தது. தற்போது போதிய மழையின்றி அணை வறண்டு வருவதால் ஆடு, மாடு வளர்ப்பவர்கள், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விவசாயி பாண்டியராஜ் கூறுகையில், வெம்பக்கோட்டை அணை நீர் ஆதாரப் பகுதியில் பருவ மழை சரிவர பெய்யாததால் அணைக்கு குறைவான நீர்வரத்து இருந்தது.

இருப்பினும் மழை பொழியும் என்ற நம்பிக்கையில் சாகுபடி பணி தொடங்கப்பட்டது. தற்போது மழையின்றி அணைநீர் வேகமாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விடும். இதனால் கிணற்றுப் பாசன விவசாய பணியில் பாதிப்பு ஏற்படக்கூடும், என்றார்.


Tags : Wemcastle , Sivakasi, Water Storage,Rain Season
× RELATED ஷட்டர்களில் கசிவு, கடும் வெயில்...