×

அனைத்துப் பெண்களும் சாதரணக் கட்டணப் பேருந்துகளில், இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பிற்கு மிகுந்த வரவேற்பு : அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை : மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை,  மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் இன்று (21.06.2021) ஆய்வு செய்தார்.

  தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினை கட்டுப்படுத்திட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போர்கால அடிப்படையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக நோய்த் தொற்று பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 10.05.2021 முதல் 21.06.2021 காலை வரையில், மாநிலம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமுலில் உள்ளது.  மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தினை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, வரும் 28.06.2021 வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்கள்.  குறிப்பாக,

வகை -3ல் குறிப்பிட்டுள்ளவாறு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்துப் போக்குவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணித்திட அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில், இன்று (21.06.2021) காலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையில்,50 சதவிகித இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் இன்று (21.06.2021) மாநகர் போக்குவரத்துக் கழக, மத்தியப் பணிமனையில், இயக்கப்படுகின்ற மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், உரிய முறையில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்ற பணியினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.தயானந்த் கட்டாரியா, இ.அ.ப., அவர்கள், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு.அ.அன்பு ஆபிரகாம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு.ஜோசப் டையஸ்  மற்றும் போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் திரு.பி.திருவாம்பளம் பிள்ளை ஆகியோர் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
கொரோனா  நோய் தொற்றின் தீவிரத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் தளபதியார் அவர்கள் எடுத்த போர்கால நடவடிக்கையின் பயனாக, பெரும்பாலான மாவட்டங்களில் நோய்த்தொற்று பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், நோய்த்தொற்று வெகுவாகக் குறைந்துள்ள, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே, பொதுப் பேருந்து போக்குவரத்தானது, நிலையான வழிக்காட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50 சதவிகித இருக்கைகளுடன் இயக்கிட அனுமதித்துள்ளதனைத் தொடர்ந்து, இன்று (21.06.2021)  முதல் இயக்கப்படுகின்றன.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தமட்டில், ஏறத்தாழ 2,800 பேருந்துகளும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கிட தயார் நிலையில் வைக்கப்பட்டு, காலை 9.00 மணி வரையில், 1,792 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.  இவற்றுள் 925 சாதாரணப் கட்டணப் பேருந்துகளும், 30 விரைவுப் பேருந்துகளும், 30 சிறிய பேருந்துகளும், 807 சொகுசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 750 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குத் தேவையான பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்கிட இரண்டு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

மேலும், பொதுமக்களோடு அதிக தொடர்புடைய நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தடுப்பூசியினை தவறாது செலுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த 85 சதவிகித பணியாளர்களுக்கு நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்களுக்கும் விரைவாக செலுத்தும் பொருட்டு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விரைவில் முடிக்கப்படும்.  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளபடி, அனைத்துப் பெண்களும் சாதரணக் கட்டணப் பேருந்துகளில், கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பானது மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மற்றும் திருநங்கையர்கள் (மூன்றாம் பாலினத்தவர்) ஆகியோர் சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், இன்று முதல், கட்டணமின்றி பயணம் செய்யலாம்.  அவ்வாறு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட ஏதுவாக, அவர்களுக்கு கட்டணமில்லா பயணச் சீட்டானது, வரும் 23.06.2021 அன்று முதல், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும்  விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வழங்கப்படுகிறது.  மற்ற பிற போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகள் இயக்கம் தொடங்கிய பின்னர்  வழங்கப்படும்.

மேலும், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ஏறத்தாழ 2,300 பயணிகளுக்கு, கடந்த 16.05.2021 முதல் 15.06.2021 வரை பயணம் மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள மாதாந்திர பயண அட்டையானது, 15.07.2021 வரையில் பயணம் செய்திட அனுமதிக்கப்படுவர்.

இன்று (21.06.2021) முதல் இயக்கப்படுகின்ற பேருந்துகள் அனைத்தும், அரசு விதித்துள்ள நோய்தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பயணிகள் 50 சதவிகித இருக்ககைளில் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய அனுதிக்கப்படுவர்.

பயணிகள் அனைவரும் கட்டயாம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், பேருந்தினை இயக்குகின்ற ஓட்டுநரும், நடத்துநரும் உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Minister ,Rajagapan , ராஜகண்ணப்பன்
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...