×

கட்டுமான டெண்டர், திட்ட மதிப்பீடு உட்பட எய்ம்ஸ் தொடர்பாக ஆர்டிஐயில் கேட்ட கேள்விகள் 12; வந்த பதில் 1

* மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அலட்சியம்
* விரைந்து பணிகளை தொடங்க மக்கள் வேண்டுகோள்

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர், விரிவான திட்ட மதிப்பீடு தொடர்பாக ஆர்டிஐல் 12 கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒற்றை பதிலை மட்டுமே தந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் 2015ல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி தரப்பட்டு, மூன்றாண்டுகளுக்கு பிறகு  2018ல் மதுரை தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2019, ஜன. 27ல் மதுரையில்  எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்டு, 45 மாதங்களில் பணிகள் முடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி 29 மாதங்கள் கடந்தப் பிறகும் கட்டுமானப்பணிகள் இதுவரை துவக்கப்படவில்லை.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, ஆர்டிஐ மூலம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு 12 கேள்விகள் அனுப்பி இருந்தார். அதாவது, டெண்டர், விரிவான திட்ட மதிப்பீடு தொடர்பாக இரு நிலைகளில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.   இதன்படி, ‘‘டெண்டர் விடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி? டெண்டர் ஓரிரு கட்டமா அல்லது பல கட்டங்களாக விடப்படுகிறதா? பல கட்டம் எனில் ஒவ்வொரு டெண்டரின் மதிப்பு என்ன? எத்தனை மாதங்களில் டெண்டர் நடைமுறைகள் முடிக்கப்படும்? டெண்டரின் தற்போதைய நிலை என்ன? டெண்டர் சம்பந்தமாக என்னென்ன பணிகள் நடக்கின்றன? அந்த பணிகளின் தற்போதைய நிலை என்ன? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரு டெண்டரை இறுதி செய்வதற்குரிய கால அவகாசம் எத்தனை நாட்களென நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

பணியை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு, பணியை தொடங்குவதற்கான அனுமதி கடிதம் எந்த தேதியில் வழங்கப்படும்? திருத்தப்பட்ட விரிவான திட்ட மதிப்பீடு என்ன? விரிவான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கும் தேதி? என்ன மாதிரியான பணிகள் மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது..’’’ இப்படியாக மொத்தம் 12 கேள்விகளாக பிரித்து கேட்டிருந்தார்.  இதற்கு தற்போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் இருந்து பதில் வந்துள்ளது. இதில், ‘‘‘‘டெண்டர் மற்றும் விரிவான திட்ட மதிப்பீடு சம்பந்தமான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில், பகுதியாக இந்த தகவல்களை பகிர இயலாது’’’’ என ஒற்றை பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மக்கள் கூறும்போது, ‘‘‘‘நிரந்தர கட்டிடங்களுக்கான பணி துவங்கும் தேதியை உடனடியாக அதிகாரிகள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். டெண்டர் நடைமுறைகளை விரைவில் முடித்து இந்த பணிகளை துவங்கினால்தான் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டத்தினருக்கு பயனுள்ளதாக அமையும். தற்காலிக கட்டிடங்களை கட்டுவதற்கென முதல்வர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். எனவே அதிகாரிகள் இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் விரைவில் பணி தொடங்க வேண்டும்’’ என்கின்றனர்.

Tags : AIIMS , 12 questions asked at RTI regarding AIIMS including construction tender, project evaluation; Answer 1
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...