கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நூலகத்தின் நுழைவாயில் முன் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதில் திருவள்ளுவர் காவி உடையணிந்து காணப்பட்டது. இதனால், அந்த புகைப்படம் குறித்து கடும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் சார்பில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படம் நேற்று அங்கு வைக்கப்பட்டது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் தரப்பில் கூறுகையில்,‘‘காவி உடையணிந்த திருவள்ளுவரின் புகைப்படம் கடந்த 2017ல் வைக்கப்பட்டது. அப்போது முதல் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது, புகைப்படம் குறித்து சர்ச்சை கிளம்பியதால், வேளாண் அமைச்சர் மற்றும் துணைவேந்தரின் அறிவுறுத்தலின் பேரில் காவி உடையணிந்த திருவள்ளுவரின் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது, அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.