×

மணலூர் அகழாய்வில் முதன்முறையாக குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு: தொல்லியல் ஆய்வாளர்கள் ஆச்சரியம்

திருப்புவனம்: தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. மேலும் அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் நடக்கிறது. மணலூரில் இதுவரை 3 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் 2வது குழியில் மூன்று அடி ஆழத்தில் சிறு குழந்தையின் எலும்புக்கூட்டின் மேற்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை நடந்த அகழாய்வில் கொந்தகை கிராமம்தான் பண்டைய மக்களின் மயான காடாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
கொந்தகையில் 3 நிலைகளில் பண்டைய மக்களை புதைத்திருப்பது கண்டறியப்பட்டது. தற்போது முதன்முறையாக மணலூர் அகழாய்வு தளத்தில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு வெளியே தெரிந்துள்ளது தொல்லியல் ஆய்வாளர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மணலூர் மனிதர்களின் வாழ்விடமாகவும் மற்றும் தொழிற்கூடங்கள் இயங்கி வந்த இடமாகவும் கருதப்பட்ட நிலையில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டதால் கீழடி அகழாய்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எலும்புகளின் டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு அதன் காலம் தெரியவரும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Manalur , Child skeleton found for the first time in Manalur excavations: Archaeologists surprised
× RELATED சிதம்பரம் அருகே நகை திருடிய வாலிபர் கைது