×

ராமர் கோவில் கட்டுவதில் முறைகேடு : ரூ.2 கோடி நிலத்தை ரூ.18 கோடிக்கு ஒன்றிய அரசின் அறக்கட்டளை வாங்கியது குறித்து சிபிஐ விசாரிக்க கோரிக்கை

லக்னோ : அயோத்தியில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ. 18 கோடிக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கட்டுமான பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில், ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அறக்கட்டளையில் 12 பேரை ஒன்றிய அரசே நியமித்துள்ளது. அறக்கட்டளையின் கீழ் 70 ஏக்கர் நிலம் உள்ளது. இதனிடையே ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை ஒட்டி 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலம் உடனடியாக ரூ. 18.5 கோடிக்கு ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவுகளும் மற்றும் முத்திரைதாள்களும் மோசடி நடந்ததற்கு சான்று ஆவணங்களாக இருக்கின்றன. சில நிமிடங்களில் நிலத்தின் விலை மதிப்பு பல கோடி ரூபாய் அதிகரிப்பதற்கு மோசடியே காரணம் என்று சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ராமர் கோவில் விவகாரம் அரசியல் கட்சிகளின் வியூகங்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

அயோத்தியில் நிலம் மோசடி குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மீ கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. நிலம் மோசடியில் அயோத்தி மாநகர மேயர் மற்றும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குற்றச்சாட்டை மறுத்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரும் அறக்கட்டளையின் செயலாளருமான சம்பத் ராய், அரசியல் நோக்கத்திற்காக குற்றஞ்சாட்டப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார். அயோத்தியில் வளர்ச்சி பணிகளை உத்தரப் பிரதேச அரசு துவக்கி உள்ளதால் நிலத்தின் விலை மதிப்பு உயர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Ram ,CBI ,United Kingdom Trust , அயோத்தி
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...