ராஞ்சி: ஜார்கண்டில் பாஜக நிர்வாகியின் மகளை கழுத்தை நெரித்துக் கொன்று, மரத்தில் தொங்கவிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் பாங்கி பகுதியை சேர்ந்த உள்ளூர் பாஜக நிர்வாகி ஷியாம் நாராயண் பிரஜாபதி, தனது 15 வயது மகள் திடீரென மாயமானதாக பாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், லால்மதி காட்டில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் பாலமு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாலமு போலீஸ் எஸ்பி சஞ்சீவ் குமார் கூறுகையில், ‘சிறுமி மர்ம மரண வழக்கில் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளோம். அவர்களின் ஒருவன் பிரதீப் சிங். இவனுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், சிறுமியுடன் அவனுக்கு காதல் இருந்தது. அவன், சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி உள்ளான். அதற்கு சிறுமி மறுத்ததால், அவரை வீட்டில் இருந்து வரச்செய்து, தனது நண்பர் சூரஜ் சோனியுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தான்.
அவர்கள் செய்த குற்றத்தை மறைக்க, சிறுமியின் உடலை அப்பகுதியில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போன்று தொங்க விட்டுவிட்டு தப்பினர். சிறுமியின் வலது கண்ணில் காயங்கள் உள்ளன. கொலை செய்யும் முன், சிறுமியை இருவரும் தாக்கியிருக்க வாய்ப்புள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.