சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அறிக்கை: கொரோனா தொற்றின் 3வது அலை பரவும் அபாயம் இருப்பதால், 18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் பரவி வருகிறது. இதனால் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களும் தடுப்பூசி போடுவதற்கு தயாராக உள்ளனர். ஏற்கனவே முதல் மற்றும் 2ம் அலையில் முதியவர்கள், நடுத்தர வயதுடையவர்கள் என ஏராளமான உயிர்களை பறிகொடுத்து பரிதவித்து வருகிறோம்.
தற்போது குழந்தைகளையும் பாதிக்கிற வகையில் 3வது அலை இருக்குமோ என்ற அச்சமும் பீதியும் கிளம்பியுள்ளது. இந்நேரத்தில் மக்களின் அச்சத்தையும் விழிப்புணர்வையும் புரிந்து கொண்டு, அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.