×

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி: சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு திடீரென  நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு நேற்று ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கிளம்பின. ஆன்மிகவாதி என்ற போர்வையில் தாங்கள் எந்த அளவுக்கு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டோம் என்பது குறித்து, அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சமூகவலைத்தளத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இதன் அடிப்படையில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இதுகுறித்து விசாரிக்க முன்வந்துள்ளது.

அதற்காக சிவசங்கர் பாபாவுக்கு சம்மனும் அனுப்பியிருந்தது. அதேபோல பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், சிவசங்கர் பாபாவின் வழக்கறிஞர், பள்ளியின் தலைமை ஆசிரியர், 3 ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே சம்மன் அனுப்பியது. அதன்படி பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன் 3 ஆசிரியர்கள் என 4 பேர் விசாரணைக்காக ஆஜரானார்கள். இதையடுத்து இந்த பாலியல் புகார் தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி மற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தி அவர்கள் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர் சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவர் தரப்பு வக்கீல் மட்டுமே ஆஜரானார். சிவசங்கர் பாபாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான மருத்துவ சான்றிதழ், போட்டோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

Tags : Shivshankar Baba , Sivashankar Baba admitted to hospital for sexual harassment
× RELATED போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா...