சென்னை: சென்னை அருகே கேளம்பாக்கத்தில் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா நடத்தி வரும் சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளிடம் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை அளித்த விவகாரம் கடந்த இரண்டு வாரங்களாக வாட்ஸ் அப் மற்றும் யூ - டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக கடந்த 1ம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுமத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணையக் குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, சமூக வலைத்தளங்களில் பரவும் சாமியாரின் பாலியல் புகார் குறித்தும், ஆசிரம வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் எத்தனை மாணவியர் தங்கி படிக்கின்றனர் என்றும், அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு பெண்கள் ஆணையத்தின் சார்பில் அதன் தலைவர் கௌரி அசோகன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் இப்பள்ளியில் விசாரணை நடத்தினர். இந்த இரு விசாரணைகளின்போது பள்ளி நிர்வாகத்தின் சார்பில் போதிய ஒத்துழைப்பு தரப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இந்நிலையில், வருகிற 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தின் முன்பு சிவசங்கர் பாபா, அவரது வழக்கறிஞர், முன்னாள் மாணவிகள், பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், 3 ஆசிரியைகள் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டுமென சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறினார்.