சென்னை: சென்னை துறைமுகம், கல்யாணபுரம், உட்ஸ் ஒர்க் சாலை பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். அப்போது, கல்யாணபுரம் பள்ளம் பகுதியில் உள்ள பொதுகழிவறைகள் பயன்படுத்த முடியாத வகையில் பழுதடைந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, முகம் சுளிக்க வைக்கும் வகையில் காணப்பட்ட அந்த கழிவறை உள்ளே சென்று அமைச்சர் பார்வையிட்டார். அந்த கழிவறைகளை 15 நாட்களுக்குள் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல், அங்குள்ள கேப்டன் காட்டன் கால்வாயை பார்வையிட்டு, அதில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை உடனே அகற்றி, தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.