×

கருவாடு கூட மீன் ஆகலாம், சசிகலா ஒருபோதும் அதிமுக உறுப்பினராக முடியாது!: ஆடியோ குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி..!!

விழுப்புரம்: அதிமுக தொண்டர்களிடம் வி.கே.சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோ தினசரி வெளியாகி வருகிறது. இந்த நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடையே பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருவாடு கூட மீன் ஆகலாம், ஆனால் சசிகலா ஒருபோதும் அதிமுக உறுப்பினராக முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டு கட்சி தலைவர்களிடையே ஒற்றுமையில்லை என்கிற செய்தி வெளியாகும் நிலையில், சசிகலா திடீரென தொண்டர்களுடன் பேசி ஆடியோ வெளியிட்டு வருகிறார். நான் விரைவில் வந்துவிடுவேன். அனைத்தையும் சரி செய்துவிடலாம் என்று தொண்டர்களிடம் சசிகலா பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஓ. பன்னீர் செல்வத்துடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கட்சியில் குழப்பம் ஏற்படுத்தவே சசிகலா ஆடியோ வெளியிடுகிறார் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசியில் உரையாடியது குறித்து ஆவேசமாக பேசியுள்ளார். இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது. அவருக்கும், அதிமுக-வின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவர் ஜெயலலிதாவின் வீட்டிலே அவருக்கு உதவியாளராக இருந்து வந்தார். 


அவ்வளவு தான். அவருக்கும் இந்த இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா இப்போது என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்காது. எங்கள் மூத்தவர் காளிமுத்து கருவாடு மீன் ஆகாது என்று சொன்னார். தற்போது கருவாடு கூட மீன் ஆகிவிடலாம்.  ஆனால், அதிமுக-வில் சசிகலா ஒருநாளும் உறுப்பினராக முடியாது. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் இந்த இயக்கத்தை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஒரு சசிகலா அல்ல ஆயிரம் சசிகலா வந்தாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தார். 



Tags : Sasicila ,Former Minister C , Embryo, Fish, Sasikala, AIADMK Member, Audio, CV Shanmugam
× RELATED முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...