×

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 மாதங்களில் 28 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடந்து வருகிறது. அதாவது 18 வயது நிறைவடையாத பெண், 21 வயது நிறைவடையாத ஆண் திருமணம் நடந்தால் அது குழந்தை திருமணமாகும். மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 28 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். குழந்தை திருமணம் செய்வதால் கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாத காரணத்தினால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும் தாய், சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மேலும் ரத்த சோகை, உடல் மற்றும் மனம் பாதிப்பு அடைவதால் பல நோய்கள் ஏற்படவும், படிக்கும் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வியறிவு தடைபட்டு தன்னம்பிக்கை குறைவும் ஏற்படுகிறது. இதனால் பாலியல் ரீதியான பிரச்சனைகள், தம்பதிக்குள் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு தற்கொலை செய்யும் நிலையும் ஏற்படுகிறது. தம்பதிக்குள் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால், இளம் விதவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. திருமண தடைச்சட்டம் 2006ன்படி குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.

இதில் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணத்தை நடத்தியவர் மற்றும் நடத்த தூண்டியவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், பதிப்பக உரிமையாளர், மந்திரம் ஓதுபவர், மண்டப உரிமையாளர் உட்பட அனைவரும் குற்றவாளிகள். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098,

பெண்கள் உதவி தொடர்பு எண் 181, மாவட்ட சமூக நல அலுவலக தொலைப்பேசி எண் 044-29896049 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைப்பேசி எண் 044-27665595 ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், குழந்தை திருமணம் இல்லா திருவள்ளூர் மாவட்டம் என்று உறுதி கூறுவோம் என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvallur , 28 child marriages stopped in 4 months in Tiruvallur district: Collector information
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...