×

தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறல் பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் அதிரடி கைது

*கோயில் தீர்த்தம் என்று கொடுத்து எங்களை சீரழித்தார்
*அதிர்ச்சி தரும் புகாரால் பள்ளி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த போலீஸ் முடிவு
*தொடரும் சம்பவங்களால் பெற்றோர் அதிர்ச்சி

சென்னை : பயிற்சி அளிப்பதாக தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறல் நடத்தியதாக மாணவிகள் இருவர் அளித்த புகாரின்படி பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். ‘கோயில் தீர்த்தம்’ என்று கொடுத்து எங்களை சீரழித்தார் என்று முன்னாள் மாணவிகள் சிலர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால் பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்தின் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.  

சென்னையில் பிரபலமான பள்ளிகளில் ஒன்றாக பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமம் உள்ளது. இந்த பள்ளியில் எழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு சீட் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், அரசு ஒதுக்கீட்டில் ஒரு சில மாணவர்கள் மட்டும் படிக்க முடியும். பள்ளியில் 98 சதவீதம் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ள மற்றும் மிகவும் வசதிப்படைத்த குடும்பத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் தான் படித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்தின் கீழ் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகள் பள்ளி ஆசிரியர்கள் கொடுக்கும் பாலியல் தொந்தரவுகளை சகித்து கொள்ள முடியாமல் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் மாணவிகளின் புகாரின் படி பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியாததால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் ஆசிரியரின் புகைப்படத்துடன் பதிவு செய்தனர். இது தமிழகம் மற்றும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதைதொடர்ந்து கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணியாற்றி வந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் அதிரடியாக கைது ெசய்யப்பட்டடார்.மேலும், வேறு யாரேனும் ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி இருந்தால் 9444772222 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்ட்டது.  அதைதொடர்ந்து பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்கள் மீது முன்னாள் மற்றும் தற்போது படித்து வரும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகள் என 35க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

அதேநேரம், முன்னாள் மாணவிகள் சிலர் மகளிர் போலீசாரிடம் நம்ப முடியாத அதிர்ச்சி தரும் தகவல்களை கூறி போலீசாரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இது சென்னையில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவி மட்டும் கூற வில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து புகார் அளித்த முன்னாள் மாணவிகளும் ஒரே குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

விசாரணையின் போது பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: பத்மா சேஷாத்திரி பள்ளியில் அதிகளவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகளில் பலர் அரசு ஒதுக்கீட்டின் மூலம் பள்ளியில் சேர்ந்தவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பிள்ளைகள் தான் என்று மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சரியாக படிக்காத சில மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் தனி வகுப்பு நடத்துவதாக விடுமுறை நாட்களில் பள்ளிக்கு அழைத்துள்ளதாகவும், அப்போது ஆசிரியர் ராஜகோபாலன்  நான் கோயிலுக்கு சென்று இருந்தேன். அப்போது அங்கு கொடுத்த தீர்த்தம் என்று தண்ணீர் போன்று ஒன்று கொடுப்பார் என்றும் அதை குடித்த உடன் சிறிது நேரம் எங்களுக்கு மயக்கமாக இருக்கும்.

மயக்கம் குறித்து ஆசிரியரிடம் சொன்னால் நீ காலையில் சாப்பிடாமல் வந்து இருக்கிறாய் .அதனால் தான் மயக்கமாக இருக்கும். எனவே சிறிது நேரம் ஓய்வு  அறையில் தூங்கிவிட்டு வகுப்பு அறைக்கு வா என்று கூறிவிட்டு செல்வார். அதன் பிறகு எங்களுக்கு ஒரு மணி நேரம் என்ன நடந்தது என்று தெரியாது. உடல் மட்டும் வலிக்கும் அதன் பிறகு தான் நமக்கு ஏதே தவறு நடந்து இருக்கிறது என்று உணர்வோம். அப்போது தான் ஆசிரியர் ராஜகோபாலன் எங்களை ஆபாசமாக தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு, மிரட்டி எங்களை சீரழித்தார் என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலம் அளித்த முன்னாள் மாணவிகளில் பலர் தற்போது பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.நேற்று பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீது மேலும் 3 மாணவிகள் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மாணவிகள் என்பதால் அவர்கள் அளித்துள்ள புகார்களின் படி தனித்தனியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனியாக பயிற்சி மையம் மூலம் பெண்களுக்கு  மற்றும் அண்ணாநகர் கிளையில் உள்ள பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் சொல்லிக்கொடுத்து வந்தார் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ். இவர்,   கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகளை பள்ளியின் தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ் என்பவர் மீது பாதிக்கப்பட்ட 2 மாணவிகள் வாட்ஸ் அப் எண்ணில், புகார் அளித்தனர். அந்த புகாரின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் போலீசார் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அதிகாலையில் கராத்தே பயிற்சிக்கு வரும் போது மாணவிகளை தனி அறைக்கு அழைத்து சென்று தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. மேலும், கராத்தே பயிற்சி உடையை மாணவிகள் மாற்றும் போது அதை ஒளிந்து இருந்து பார்த்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டை கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ் விசாரணையின் போது முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அவரது செல்போனை ஆய்வு செய்த போது சில மாணவிகளின் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு தான் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஒவ்வொரு நாளும் பத்மா சேஷாத்திரி பள்ளிஆசிரியர்கள் மீது மாணவிகள் தொடர் பாலியல் புகார் அளித்து வருவதால் பள்ளி நிர்வாகத்தின் மீது பிடி இறுகி வருகிறது. அதேநேரம் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பிறகு தான் ஆசிரியர் ராஜகோபாலனால் எத்தனை மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகினர்.

எத்தனை ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர் என்று தெரியவரும்  என்று போலீசார் தெரிவத்துள்ளனர். அதேநேரம், ெசன்னை மாவட்ட குழந்தைகள் நல குழு முன்பு மாணவிகள் பாலியல் தொடர்பான விசாரணைக்கு பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வர் கீதா இன்று காலை 11 மணிக்கு ஆஜராக உள்ளனர். பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவிகள் தொடர் பாலியல் குற்றச்சாட்டால், அப்பள்ளியில் படித்து வரும் மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் கராத்தே மாஸ்டராக பணியாற்றி வரும் கெவின் ராஜ் மீது, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ஐபிசி 376 (பாலியல் வன்கொடுமை), 506(i) கொலை மிரட்டல், 354 உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Padma Seshadri ,School ,Karate Master , Chennai: According to a complaint lodged by two students, Padma was taken to a separate room for training and sexually assaulted.
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி