புதுடெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 31ம் தேதி விசாரித்து தீர்வு காண்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் மாத இறுதி மற்றும் ஜூலை முதல் வாரங்களில் நடைபெறலாம் என தகவல் வெளியாகியது. இந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் மம்தா சர்மா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சிபிஎஸ்இ உட்பட 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை வழக்கமான முறையில் நடத்துவது கூடாது. சூழல் அனைத்தும் சரியாகும் வரை தேர்தவை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘‘அனைத்து மாநிலங்களிலும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் இருந்து வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றமே தானாக முன்வந்து அனைத்து மாநில பொதுத் தேர்வுகள் குறித்த விசாரணை மேற்கொண்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
மனுதாரிரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், ‘‘இது தொடர்பாக விசாரணை நடத்தும் போது சில தீர்வுகளை நாங்கள் கண்டிப்பாக கூறுகிறோம்’’ எனக்கூறி வழக்கை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சகம் வரும் 1ம் தேதி முடிவு அறிவிப்பதாக கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.