புதுடெல்லி: ரூ13,500 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, டோமினிக்காவில் ‘இன்டர்போல்’ உதவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை மூலம் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி மீது அமலாக்க பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிது. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட மெகுல் சோக்சி, கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றான ஆண்டிகுவாவில் தலைமறைவாக வசித்து வந்தார்.
ஆன்டிகுவா மற்றும் பார்படா தீவில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை பெற்ற மெகுல் சோக்சி கடந்த 2018ம் ஆண்டு முதல் அங்கு வசித்து வந்தார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 23ம் தேதி முதல் ஆண்டிகுவாவில் இருந்து திடீரென அவர் மாயமானார். இதுதொடர்பாக ஆன்டிகுவா போலீசார் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 23ம் தேதி மெகுல் சோக்சி காரில் செல்வதைக் கண்டோம். அவருடைய காரைக் கைப்பற்றி உள்ளோம். அவருடைய புகைப்படத்தை தீவின் பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பி தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளோம்’ என்று கூறியது.
அதனால், மெகுல் சோக்சியை பிடிப்பதற்காக சர்வதேச போலீசான ‘இன்டர்போல்’ மஞ்சள் நோட்டீஸ் வெளியிட்டது. அதன்படி அவரை கரீபியன் தீவுக்கூட்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து கரீபியனின் பக்கத்து தீவான டோமினிக்காவில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு அங்குள்ள போலீசாரால் மெகுல் சோக்சி கைது செய்யப்பட்டார். அவரை, ஆண்டிகுவா போலீசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மெகுல் சோக்சி ஆண்டிகுவா குடியுரிமை பெற்றவர் என்பதால், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. விரைவில், அங்கிருந்து அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.