மயிலாடுதுறை: கொரோனா தொற்றிலிருந்து மீண்ட மயிலாடுதுறை பெண், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் முத்து. சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உதவியாளர். இவரது மனைவி மீனா(45). சீர்காழி கூட்டுறவு மருந்தக மருந்தாளுநரான இவர், கடந்த மாதம் 12ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். வீடு திரும்பி 6 நாட்கள் கழித்து மீனாவுக்கு திடீரென இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் மீனா சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் மீனாவுக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதியானது. கடந்த 14ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மீனா, சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். ஆம்புலன்சில் மீனா உடல் ேநற்று காலை கொண்டு வரப்பட்டு மயிலாடுதுறையில் தகனம் செய்யப்பட்டது. கடலூரில் 3 பேர் பலி: கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
மேலும், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 54 வயது நபர் கடலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு முன்பு இறந்தார். பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சைக்கு நேற்று பலியானார். சேலத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரிப்பு: சேலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு வாலிபர் ஒருவரின் ஒரு கண் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.