சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய நல்லகண்ணு, வைகோ, டிடிவி, பிரேமலதா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த 14ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாக பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், கடந்த 21ம் தேதி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளை தவிர 38 வழக்குகளை திரும்ப பெற்றிடவும், அதில் தொடர்புடைய கீழ்க்கண்ட அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்ப பெற்றிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1.ஆர்.நல்லகண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 2.வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக, 3. கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 4.டி.டி.வி.தினகரன், துணை பொதுச்செயலாளர், அமமுக, 5.பிரேமலதா விஜயகாந்த், மாநில மகளிரணி தலைவர், தேமுதிக, 6.எல்.கே.சுதீஷ், மாநில துணை செயலாளர், தேமுதிக, 7. அனிதா ராதாகிருஷ்ணன், மீன்வளத்துறை அமைச்சர், திமுக, 8. அழகு முத்துபாண்டியன், மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , 9. ராஜா, மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , 10. ஹென்றி தாமஸ், மாவட்ட செயலாளர், அமமுக, 11. பூமயில், மாவட்ட செயலாளர், இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், 12.ஆர்தர் மச்சோடா, துணை செயலாளர், ஆம் ஆத்மி கட்சி, 13. பாலசிங், ஒன்றிய செயலாளர், திமுக இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.