டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுப்பெற்று புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமானை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அது நாளை வலுப்பெற்று புயலாக மாறும்என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் மேற்குவங்கம், வடக்கு ஒடிசா மற்றும் வங்கதேச கரையை வரும் 26-ம் தேதி கடக்கலாம் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம், ஒடிசாவில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்குவங்கம் அருகே உள்ள சாகர் தீவுகளில் துறைமுகம் சார்பில் கண்காணிப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மிசாபூர் கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தில் கடற்கரை கப்பல்கள் மற்றும் விமானங்கள் மீட்டு மற்றும் நிவாரண பணிகளுக்காக தயார் நிலையில் இருக்கின்றன. இதனிடையே யாஸ் புயல் எதிரொலியாக நேற்றுமுதல் வருகின்ற 29-ம் தேதி வரை சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. நாகர்கோவில்-ஹவுரா, திருச்சி-ஹவுரா, சென்ட்ரல்-புவனேஸ்வர் உள்பட 22 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. யாஸ் புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் மாறாக 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியும், உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவும் அரசியல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் தேசிய பேரிடர் மேலாண்மாய் ஆணைய பிரதிநிகளும், தொலைத்தொடர்பு, மின்சாரம், விமானபோக்குவரத்து, புவி அறிவியல் உள்ளிட்ட துறைகளின் செயலாளர்களும் கலந்துகொண்டார்கள். புயலை எதிர்கொள்வது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்கினார்.