சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த, பலத்த காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியத நடவடிக்கையை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகளில் சி.பி.ஐ. விசாரிக்கும் வழக்குகள், உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகள் தவிர அனைத்தும் தமிழக அரசால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மேலும், போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டோருக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும். கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வரவேற்பதோடு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறையை ஏவிய காவல்துறை அதிகாரிகள் அனைவரின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான உறுதியான நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இதேபோன்று கூடங்குளம் போராட்டம், காவிரி டெல்டா பாதுகாப்பு போராட்டம், எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டம் மீதான வழக்குகள் உள்ளிட்ட போராட்டங்களுக்காக போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.