சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 50 வயது கொண்ட நபருக்கு நேற்று முன்தினம் கண்ணில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று அறிகுறி தென்பட்டுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் கருப்பு பூஞ்சை அறிகுறி இருந்ததால், அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதேபோல், ஓமலூர் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபருக்கும் கண்ணில் கருப்பு பூஞ்சை தொற்று போல் தென்பட்டுள்ளது. அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தற்போது அனுமதிக்கப்பட்டு கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இதயைடுத்து, அனைத்து கொரோனா நோயாளிகளையும் கண்காணிக்கும் பணியில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சேலத்திலும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று அறிகுறி இருவருக்கு ஏற்பட்டிருப்பதும், இந்நோய் பரவுவதும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.