டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மத நிகழ்வுகளில் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு தவறிவிட்டதாக மாநில உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சார் தாம் யாத்திரை நிகழ்வை முன்னட்டு பத்ரிநாத், கேதார்நாத் புனித தளங்களில் யாத்ரீகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து விசாரித்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் கும்பமேளாவில் செய்த அதே தவறை சார் தாம் யாத்திரையிலும் அரசு செய்வதாக கண்டனம் தெரிவித்தனர். ஏன் நமக்கு நாமே சங்கடஹத்தை ஏற்படுத்தி கொள்கிறோம் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பெயரளவில் மட்டுமே இருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர்.
கொரோனா பாதிப்புகளை பார்த்து உத்தரகாண்ட் ஏன் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என நாடே கேள்வி எழுப்புவதாக கூறிய நீதிபதிகள் லட்சக்கணக்கான மக்களின் உயிருடன் மாநில அரசு விளையாடுவதாக தெரிவித்தனர். உத்தரகாண்ட் அரசு நீதிமன்றத்தை முட்டாள் ஆக்கலாம், ஆனால் மக்களை முட்டாளாக முடியாது என கூறிய நீதிபதிகள் சார் தாம் யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.