சென்னை: அனைத்துப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்களுக்கு சமயமூர்த்தி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சாதாரண கட்டணம் வசூலிக்கும் மாநகர, நகரப் பேருந்துகளில், மே 8ம் தேதி முதல் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், பெண் பயணிகளிடம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இதன்படி, பயணிகள் பேருந்துக்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். ஓட்டுநர், பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். நிறுத்தத்துக்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது.
நடத்துநர் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது. வயது முதிர்ந்த பெண்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும். பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில், கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது. பேருந்தில், பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பெண் பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து, ஓட்டுநருக்கு சமிக்ஞை செய்து, பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.