ஐதராபாத்: இரண்டாவது கட்டமாக கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி நேற்று ஐதராபாத் வந்தது. நாட்டில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது இதனை தொடர்ந்து மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம், ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் அமைப்புடன் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி கடந்த ஒன்றாம் தேதி முதல் கட்டமாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி 1.50 லட்சம் டோஸ்கள் ஐதராபாத்தை வந்தடைந்தன. தொடர்ந்து கடந்த 14ம்தேதி ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது கட்டமாக 60,000 டோஸ்கள் நேற்று தனி விமானம் மூலமாக ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விரைவில் இந்த தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி விலை ரூ.995 ஆகும்.