கூடலூர்: கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கவுண்டன் கொல்லி ஆதிவாசி கிராமத்தில் 60 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன. பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பல்வேறு இன ஆதிவாசிகள் கிராமங்களில் வசிக்கின்றனர். கொரோனா தொற்று காலத்தில் மற்ற இன மக்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் பழங்குடியின மக்கள் மக்கள் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப் படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள முக்கட்டி - சோலாடி ஆதிவாசி காலனியில் 36 பேர் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆதிவாசி மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டன் கொல்லி ஆதிவாசி கிராமத்தில் உள்ள பழங்குடியினர் பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு இங்கு வசிக்கும் 40 வயதுக்கும் மேற்பட்ட 60 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம், கூடலூர் தாசில்தார் தினேஷ்குமார், ஸ்ரீமதுரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லோகேஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.