விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கொரோனா நோயாளிகளுக்காக ராம்கோ நிறுவனத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலை துவக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் விநியோகம் தேவைப்படுகிறது. தற்போது விருதுநகர் மாவட்ட ேநாயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் கப்பலூர் மற்றும் தூத்துக்குடியிலிருந்து பெறப்பட்டு வருவதாக கலெக்டர் கண்ணன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க ராம்கோ சிமெண்ட் நிறுவனம், ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை நிறுவியுள்ளது. இதை கலெக்டர் கண்ணன் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையேற்று ேநற்று துவக்கி வைத்தனர். ராம்கோ சிமெண்ட் ஆலையில் நிறுவப்பட்டிருக்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலை, தினசரி 48 சிலிண்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
ஒரு சிலிண்டர் என்பது ஏழு கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இங்கிருந்து தயாரிக்கப்பட்ட ஆக்சிஜன், சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.52 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி முதல் மையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.