ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு அமெரிக்க வீரர் ரிய்லி ஒபெலகா, குராஷிய வீராங்கனை பெட்ரா மார்டிக் ஆகியோர் முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளனர். ரோமில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதி ஒன்றில் குரோஷியா வீராங்கனை பெட்ரா மார்டிக்(25வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா(31வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முந்தைய சுற்றில் முன்னணி வீராங்கனையான அர்யனா சபலெங்காவை வீழ்த்திய ஜெசிகா முதல் செட்டில் கடும் சவால் தந்தார்.
டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை 7-6, 2வது செட்டை 6-4 என்ற கணக்கில் பெட்ரா கைப்பற்றினார். அதனால் பெட்ரா முதல்முயைாக இத்தாலி ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்.அதேபோல் மற்றொரு காலிறுதியில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பெலிஸ்கோவா(9வது ரேங்க்), லாத்வியா வீராங்கனை ஜெலேனா ஒஸ்டபெங்கோ(49வது ரேங்க்) ஆகியோர் விளையாடினார். அதில் கரோலினா 4-6, 7-5, 7-6 என்ற புள்ளி கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார்.
ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்க வீரர் ரியலி ஒபெல்கா(47வது ரேங்க்), அர்ஜென்டீனா வீரர் பெட்ரிகோ டெல்போனிசை(64வது ரேங்க்) 7-5, 7-6 என நேர் செட்களில் போராடி வென்று முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார். டென்னிஸ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த காலிறுதி போட்டியில் நேற்று ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்(6வது ரேங்க்), ஸ்பெயின் வீரர் ரபேல் நடால்(3வது ரேங்க்) ஆகியோர் மோதினர். சுமார் 2 மணி நேரம் நடந்த ஆட்டத்தில் 6-3, 6-4 என நேர் செட்களில் நடால் வெற்றியை வசப்படுத்தினார். கூடவே நடால் தொடர்ந்து லண்டன் ஓபன்(2019) லீக் சுற்று, பாரிஸ் ஓபன்(2020) அரையிறுதி, மாட்ரிட் ஓபன்(2021) காலிறுதி போட்டிகளில் ஸ்வெரவிடம் தோற்று வந்தார். அதற்கு நேற்றைய ஆட்டத்தில் நடால் பழிதீர்த்தார்.