×

குவாட் அமைப்பில் இணைந்தால்...சீனா மிரட்டலுக்கு வங்கதேசம் பதிலடி

தாகா: குவாட் அமைப்பில் இணைவது குறித்து வங்கதேசம் முடிவு செய்தால் சீனாவுடனான உறவு பாதிக்கப்படும் என சீனா மிரட்டல் விடுத்துள்ளது.  அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2017ம் ஆண்டு இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா இணைந்தது. இந்த நாடுகளின் பொதுவான எதிரியாக சீனா உள்ளது. எனவே குவாட் அமைப்பு மாநாட்டில், சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் 4 நாடுகளின் தலைவர்களும், சீனாவின் அத்துமீறல்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த அமைப்பில் வங்கதேசமும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வங்க தேச தலைநகர் தாகாவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது வங்கதேசத்துக்கான சீனா தூதர் லீ  ஜிமிங் கூறுகையில், ‘‘4 நாடுகளில் குவாட் அமைப்பில் வங்கதேசம் இணைந்தால் சீனாவுடனான வங்கதேசத்தின் உறவில் கடும் பாதிப்பு ஏற்படும்.

இந்த குவாட் கூட்டமைப்பில் வங்கதேசம் எந்த விதத்திலும் பங்கேற்பதை சீனா விரும்பவில்லை. குவாட் அமைப்பானது சீன எதிர்ப்பு அமைப்பாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த வாரம் வங்கதேசத்துக்கு வந்த சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கீ மூலமாக இந்த செய்தியானது பிரதமர் ஷேக் அசினா அரசிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார். இதற்கு வங்கதேசம் சரியான பதிலடி தந்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமீன், ‘‘நாங்கள் சுதந்திரமான இறையாண்மைமிக்க நாடு. எங்கள் வெளியுறவு கொள்கை என்னவென்பதை நாங்கள் தீர்மானித்துக் கொள்வோம். அந்த விஷயத்தை வேறெந்த நாடுகள் கையில் எடுத்துக் கொள்ள நினைக்க வேண்டாம்’’ என கூறி உள்ளார்.

Tags : Bangladesh ,China , Bangladesh retaliates for China threats
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...