×

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பால் z+ பாதுகாப்பு கேட்டு சீரம் நிறுவனத்தின் சிஇஒ ஆதர் பூனவல்லா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

மும்பை : z+ பாதுகாப்பு கேட்டு சீரம் நிறுவனத்தின் சிஇஒ ஆதர் பூனவல்லா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரித்து வழங்கும் சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி  ஆதர் பூனவல்லா. இவருக்கு அடையாளம் தெரியாத குழுக்களிடமிருந்து கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மிரட்டல்கள் வருகிறது. அதனால் அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரகாஷ் குமார் சிங் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்குக் கடிதம் எழுதினார். இந்த கடிதம்கடந்த ஏப்ரல் 16ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு அனுப்பப்பட்டது.

 இதைத்தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில்,  z+ பாதுகாப்பு கேட்டு சீரம் நிறுவனத்தின் சிஇஒ ஆதர் பூனவல்லா மும்பை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் தத்தா மானே தாக்கல் சார்பில் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டை விரைந்து தருமாறு மாநில முதல்வர்கள், தொழில் அதிபர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் எனவே உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் z+ பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பூனவல்லாவுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது. அச்சத்தால் பூனவல்லா இங்கிலாந்திற்கு சென்று விட்டதாக வெளியான செய்திக்கும் வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  இதுவரை இந்தியாவில் உள்ள மாவட்டங்களிருந்து சீரம் நிறுவனத்திற்கு 34 கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்குவதற்கான ஆர்டர்களும், தனியார் மருத்துவமனையிலிருந்து 2 கோடி டோஸ்கள் வழங்குவதற்கான ஆர்டர்களும் சீரம் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Serum Company ,Adar ,Guunavalla ,HC , z+ பாதுகாப்பு
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...