×

'மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட காரணமாக இருந்தவர்'!: டிராபிக் ராமசாமி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி..!!

சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கடந்த 20 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தொடுத்து பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர் டிராபிக் ராமசாமி. 87 வயதான இவர், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 1 மாதமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை இவரது உடல்நிலை மிக மோசமடைந்த நிலையில், வெண்டிலேட்டர் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாலை 7:45 மணியளவில் ராமசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது  உடல் தி.நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக-வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டிராபிக் ராமசாமி உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட காரணமாக இருந்தவர் டிராபிக் ராமசாமி எனவும் அவரது இறப்பு வேதனை தருவதாகவும் தெரிவித்தார்.


 மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநரை சந்திக்க சென்றிருப்பதால் இங்கு வர இயலவில்லை என குறிப்பிட்ட உதயநிதி, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும்படி திமுக தலைவர் கூறியதாகவும் தெரிவித்தார். டிராபிக் ராமசாமி அவர்களுக்கு என்ன செய்யப்பட வேண்டுமோ அதனை திமுக தரப்பில் செய்து தரப்படும் என்றும் உதயநிதி உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து டிராபிக் ராமசாமியின் உடலானது கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்ய கொண்டு செல்லப்படவுள்ளது.



Tags : Udayanithi Stalin ,Tropic Ramasamy , People, Awareness, Tropic Ramasamy, Udayanithi Stalin
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...