மூணாறு,ஏப். 4: இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கானல், பூப்பாறை,சாந்தன் பாறை போன்ற பகுதிகளில் மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தாக்குதல் குணம் கொண்ட அரிசி கொம்பன் என்று அழைக்கக்கூடிய காட்டு யானையை வனத்துறை மயக்க ஊசி போட்டு பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களின் போராட்டம் இரவு பகலாக நடந்து வருகிறது. கடந்த மார்ச் 29ம் தேதி அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி போட்டு பிடிப்பதற்கு வனத்துறை தயாராக இருந்த நேரத்தில் உயர்நீதிமன்றம் காட்டு யானையை தற்காலிகமாக பிடிக்க வேண்டாம் என்று யானையை பிடிக்க இடைக்கால தடை உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட சிறப்பு குழு அரிசி கொம்பன் யானை பிடிப்பது தொடர்பாக மூணாறில் உள்ள தேவிகுளம் வனத்துறை அலுவலகத்தில் கூட்டம் கூடியது.
இந்த கூட்டத்தில் ஆறு விவசாயிகள் மற்றும் 10 பழங்குடி ஊர் தலைவர்களுடன் சிறப்பு குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அதே நேரம் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளை அனுமதிக்காததை எதிர்த்து வன அலுவலகம் முன்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு குழு விவரங்களை சேகரித்த பின் அரிசி கொம்பன் காட்டு யானை தாக்குதல் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று தகவல்களை சேகரித்தனர். அதே நேரம் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சிறப்பு குழு மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
The post அரிசிகொம்பன் யானையை பிடிப்பது குறித்து மூணாறில் சிறப்பு நிபுணர் குழு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.