×

வீட்டின் கதவை உடைத்து 54 சவரன் தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம் திருட்டுமர்ம ஆசாமிகள் கைவரிசைவேலூர் சேண்பாக்கத்தில் துணிகரம்

வேலூர், ஏப்.4: வேலூர் சேண்பாக்கத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 54 சவரன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி, ₹50 ஆயிரம் ரொக்கப்பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர் சேண்பாக்கம் சக்தி நகரை சேர்ந்தவர் பத்ருதீன்(30). இவர் ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா(25). இவர் தனது 4 வயது குழந்தை மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராணிப்பேட்டையில் உள்ள மாமனார் சர்புதீனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பார்ப்பதற்காக தனது மாமியார் மற்றும் குழந்தையுடன் நேற்று முன்தினம் சென்ற அவர் நேற்று மதியம் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் இரும்பு கேட் பூட்டியபடியே கிடக்க, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் முன் அறை மற்றும் பின்பக்க அறையில் உள்ள மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது. துணிமணிகள் வீடெங்கும் சிதறி கிடந்தன. மேலும் பீராக்களின் அருகிலேயே இரும்பு சுத்தியல், ஸ்பேனர் என பொருட்கள் கிடந்தது. திறந்து கிடந்த பீரோக்களை சோதனையிட்ட போது, 54 சவரன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ₹50 ஆயிரம் உண்டியல் பணம் ஆகியன திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் வீட்டில் வைத்திருந்த சுத்தியல் போன்ற ஆயுதங்களை எடுத்து பீரோவை உடைத்து நகைகளை திருடி சென்றுள்ளனர். திருட்டுபோன தங்கம், வெள்ளி நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ₹25 லட்சமாகும். இதுதொடர்பாக தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post வீட்டின் கதவை உடைத்து 54 சவரன் தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம் திருட்டு
மர்ம ஆசாமிகள் கைவரிசை
வேலூர் சேண்பாக்கத்தில் துணிகரம்
appeared first on Dinakaran.

Tags : Vellore ,Savaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...