×

வாகன ஒட்டிகளிடம் லஞ்சம் போலீஸ் எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ

சென்னை: திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் பைக்கில் தலைகவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில், பைக்கில் வந்தவரிடம் போலீஸ் பூத்தில் வைத்து போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலை தளத்தில் வெளியானது. இதுபற்றி போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்தபோது, திருமங்கலம் காவல்நிலைய போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர், முதல் நிலை காவலர் பாலாஜி ஆகியோர் வாகன ஒட்டிகளிடம் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது.

இதையடுத்து, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர் உத்தரவின்படி, எஸ்ஐ, ஏட்டு ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘‘ கோயம்பேடு மார்க்கெட், அமைந்தகரை, முகப்பேர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் தலை கவசம் அணியாமல் வருபவர்களை போக்குவரத்து போலீசார் வழிமடக்கி செல்போனில் படம் பிடித்து அபராதம் கட்டும் பில்லை அனுப்புகிறார்கள். ஆனால், தலைகவசம் அணியாமல் செல்லும் போலீசாரை கண்டு கொள்வதில்லை. அவர்களை படம் பிடிப்பதும் இல்லை. பொது மக்களுக்கு மட்டும்தானா விதிமுறைகள்.

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தொடர்ச்சியாக விபத்து ஏற்படுவதால், விபத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பணியில் இருப்பதில்லை. அபராதம் விதிக்கும் பகுதியில் மட்டும் 10க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். தலைகவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை விட்டு விபத்து நடக்கும் பகுதிகளில் தீவிர பணியில் ஈடுபடவேண்டும்.’’ என்றனர்.

The post வாகன ஒட்டிகளிடம் லஞ்சம் போலீஸ் எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Police SI ,CHENNAI ,Tirumangalam ,Dinakaran ,
× RELATED டூவீலரில் கடத்திய கஞ்சா பறிமுதல்