நெல்லை: நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமங்களான கூடங்குளம், கூட்டபுள்ளி, பெருமணல், பஞ்சல் கிராமங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் தென்பகுதிகளான வள்ளியூர், பழவூர், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் பிற்பகலில் நிலஅதிர்வு உணரப்பட்டது. கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அஞ்சு கிராமம், அழகப்பபுரம், சுசீந்திரம் ஆகிய இடங்களிலும் ஒரு சில வினாடிகள் நில அதிர்வு உணரப்பட்டது. சின்ன முட்டம், கன்னியாகுமரி மற்றும் சுற்று பகுதிகளிலும் நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
நெல்லை மாவட்டத்தின் தென் பகுதியான வள்ளியூர், பழவூர், கருங்குளம், செட்டிக்குளம், பெருமணல், கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டம் நகர்கோவிலின் கிழக்கு பகுதிகளான அழகப்பபுரம், கன்னியாகுமரி சின்னமுட்டம் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 3.38 முதல் 3.40 வரை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வினை வீட்டில் உள்ளவர்கள் உணர்ந்துள்ளனர். வீட்டில் தரையில் அமர்ந்திருந்தபோது சிறிதளவு அதிர்வு உணரப்பட்டதாக கூறியுள்ளனர்.
பொதுவாக வள்ளியூரில் உள்ள காந்தி காலனி, நீதி காலனி ஆகிய பகுதிகளில் இந்த அதிர்வு அதிகமாக தெரிந்துள்ளது. கடற்கரை பகுதிகளான பெருமணல் பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாகர்கோவிலின் கிழக்கு பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாவட்ட நிர்வாகமும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர். கூடங்குளத்தில் உள்ள நிலஅதிர்வுமானியை தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்.