×

குமாரபாளையத்தில் 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை!: பெண்ணின் தாய் உட்பட 4 பேர் கைது..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை தந்தையே இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை குள்ளங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். 2019ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்துள்ளார். கடந்த ஆண்டு அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 5 மாதம் குழந்தையை வளர்த்த நிலையில், வறுமையில் வாடியுள்ளார். அப்போது தனது சகோதரர் கார்த்திக், மாமியார் மகேஸ்வரி, மனைவியின் அக்கா கணவர் சின்ராஜ் ஆகியோர் குழந்தையை விற்க யோசனை கூறியுள்ளனர்.


அதன்படி திருப்பூரில் வசிக்கும் நாகராஜ் என்ற இடைத்தரகர் மூலம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்பனை செய்துள்ளனர். சண்முகம் கடந்த ஜனவரி மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் சண்முகத்தின் மனைவி குழந்தையை மீட்டுத் தர கோரி நாமக்கல் மாவட்டம் குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். குடும்ப நல அலுவலர் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட குமாரபாளையம் போலீசார், திருப்பூரில் இருந்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். 


மேலும் குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் நாகராஜ், மற்றும் சண்முகத்தின் அண்ணன் கார்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணின் தாயார் மகேஸ்வரி, மற்றும் அக்காவின் கணவர் சின்ராஜ் ஆகியோர் ஏற்கனவே சிறையில்  உள்ள நிலையில் இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, தலைமறையான 4 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். 



Tags : Kumarabalayam , Kumarapalayam, girl, child, sale, arrest
× RELATED குமாரபாளையத்தில் பள்ளி வாகனங்கள்...