சீர்காழி: சீர்காழி அருகே செங்கல்சூளை லோடுமேன் மர்மசாவில் சூளை அதிபர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி 4 இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறிநின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உறவினர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் தனியார் செங்கல் சூளையில் வேலை பார்த்த வந்தவர் நிம்மேலியை சேர்ந்த கூலி தொழிலாளி சீனிவாசன் (40).கடந்த 17ம் தேதி மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்தார். அதனை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி 8வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக நேற்று சீர்காழி அரசு மருத்துவமனையில் இருக்கும் சீனிவாசன் உடல் வீணாகி வருவதால் உடலை அடக்கம் செய்யும் பணிகள் தொடங்கியது. ஆனால் உரிய அனுமதி கிடைக்காததால் உடல் அடக்கம் செய்யப்படவில்லை. உடல் அடக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் சீனிவாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலை வழக்குபதியும் வரை சீனிவாசன் உடலை பாதுகாக்க வலியுறுத்தி திருவாலி கிராமத்தில் நிம்மேலி கிராமத்தை சேர்ந்த கதிரவன் (23), சரவணன் (23), சத்தியசீலன் (20), சிங்காரவேலன் (20) ஆகிய 4 பேரும் நேற்று மாலை செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த சீனிவாசன் உறவினர்கள் விஜயா (48), கோமதி (47) செல்வி (48) ஆகியோர் திடீரெறு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களை செல்போன் டவரிலிருந்து கீழே இறங்கி வருமாறு ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொண்டார். அப்பகுதியில் தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் (31) மற்றும் தைக்கால் மதகடி பகுதியை சேர்ந்த மணிமாறன்(30) ஆகியோர் நேற்று மாலை கையில் தேசியக் கொடி மற்றும் மண்ணெண்ணெய் கேனுடன் கொள்ளிடம் அருகே புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் டவரில் உச்சியின் மேல் ஏறி நின்று செங்கல்சூளை உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞர்களை சமாதானபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.