சேலம்: சேலம் மாநகராட்சி குமாரசாமி பட்டியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி இல்லாததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் காத்திருக்கின்றனர். கொரோனா தொற்று இரண்டாம் அலையானது மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வீரியமானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கமானது மிக அதிக அளவில் பரவி வருகிறது. நேற்றைய நிலையை பொறுத்தவரை 12,600 பேர் தமிழக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 411 பேர் இந்த கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் தடுப்பூசிகள் போதிய கையிருப்பு இல்லாத காரணத்தினால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதும், திரும்ப செல்வதுமாக உள்ளனர். சேலம் மாநகராட்சி குமாரசாமி பட்டியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 9 மணியிலிருந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக தடுப்பூசி பற்றாக்குறையால் காத்துக்கொண்டுள்ளனர்.
இன்னும் இங்கு தடுப்பூசி வராத நிலை தான் இருக்கிறது. கோவிஷீல்டு மருந்து இருந்தால் கோவாக்சின் கிடைப்பதில்லை. கோவாக்சின் இருந்தால் கோவிஷீல்டு கிடைப்பதில்லை. கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டவர்களுக்கு கோவிஷீல்டு இல்லாத நிலை தான் இருக்கிறது. அதேபோல கோவாக்சின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு கோவாக்சின் இரண்டாவது டோஸ் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மக்கள் ஒரு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டோர் ஏராளமானோர் இங்கு தடுப்பூசி போடுவதற்காக வந்துள்ளனர். ஆனால் தடுப்பூசி இன்னும் கிடைக்காத காரணத்தினால் அவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். 1000 டோஸ் கேட்டால் வெறும் 100 டோஸ் தான் அனுப்புவதாக சுகாதார பணியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் மக்களை திருப்பி அனுப்பக்கூடிய சூழ்நிலை தான் உள்ளது.