ஹரித்துவார்: ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடியவர்களில் இதுவரை 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கும்பமேளா நடந்து வருகின்றது. நேற்று இரண்டாவது புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள், சாதுக்கள் என சுமார் 28 லட்சம் பேர் ஹரித்துவாரில் திரண்டு இருந்தனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் அரசு அறிவுறுத்தி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் எதனையும் பின்பற்றவில்லை. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கொரோனா இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என எதுவும் பின்பற்றப்படவில்லை.
இந்நிலையில் ஞாயிறு இரவு 11.30 மணி முதல் நேற்று மாலை 5 மணி வரை கும்பமேளாவில் பங்கேற்ற 18,169 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 102 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழாவில் கலந்து கொண்ட மேலும் பலருக்கு தொற்று பரவி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள், சாதுக்கள் வந்திருப்பதால் பல மாநிலங்களிலும் இந்த தொற்று பரவும் அபாயமும் நிலவுகின்றது. கும்பமேளா நடைபெறும் இடத்தில் தெர்மல் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. முககவசம் அணியாதவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.