மதுரை: கொரோனா தொற்றால், கடந்தாண்டு மதுரையில் புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு சித்திரை திருவிழா வரும் ஏப்.15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்.22ல் பட்டாபிஷேகம், ஏப்.24ல் மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்.25ல் தேரோட்டம், ஏப்.26ல் கள்ளழகர் எதிர்சேவை, எப்.27ல் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு என தொடர்ந்து விழா ஏப்.30ம் தேதி வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால், இந்தாண்டும் சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை கலெக்டர் அன்பழகன் கூறுகையில்,‘‘ மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா, கடந்த ஆண்டை போலவே கோயில் உள்ளேயே திருவிழாவாக நடைபெறும். திருவிழா நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இணையதளம் மூலம் பார்க்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது’’என்றார்.